ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய “ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை” நூலைப் படித்தேன். “சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே” எனும் கருத்தாக்கத்தை நிறுவ முனைகிறது இந்தப் பெரு நூல்.
பூமியை சமன் செய்ய தென்னகத்திற்கு அகஸ்தியர் புலம் பெயர்ந்த புராணம் ஆதிகாலத்திய இடப்பெயர்வை குறிப்பதாகக் கொள்வது நியாயமே. ஆனால் வேதகால ரிஷியாகிய அகஸ்தியர் ஆரிய நாகரிகத்தை தெற்கே கொண்டுவந்தவர் என்றே கருதப்படுகிறது. காரணம் அவர் பாடிய பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளது. மறுபுறம் அவர்தான் முதன்முதலில் தமிழுக்கு இலக்கணம் வடித்தவர் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டும் பொருந்தவில்லை. ஒருவேளை அகஸ்தியர் வேறு, அகத்தியர் வேறாக இருக்க லாம். இவரும் புலம் பெயர்ந்து வந்திருக்கலாம்;
திராவிட நாகரிகத்தை தெற்கே கொண்டு வந்திருக்கலாம். “அகத்தியர், வேளிர் குடியைச் சேர்ந்த 18 வேளிர் தலை வர்கள் மற்றும் 18 குடும்பங்களுடன் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்ததாகவும், அங்கு அவர்கள் காடுகளை அழித்து வேளாண்மை நிலங்களை ஏற்படுத்தியதாகவும், பின்பு அகத்தியர் தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள பொதிகை மலையில் குடியமர்ந்ததாகவும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரை தெரிவிக்கிறது” என்கிறார் இந்த நூலாசிரியர். இந்த அகத்தியரே தமிழுக்கு இலக்கணம் தந்திருக்கலாம்.
மக்கள் புலம் பெயர்தல் பற்றி சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. பட்டினப்பாலை கூறுகிறது: “மொழி பல பெரு கிய பழி தேர தேஎத்துப்/ புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்/ முட்டாச் சிறப்பின் பட்டினம்”. பல மொழி பேசுவோர் புலம் பெயர்ந்து வந்துள்ளனர். ஆனால் மோத லின்றி கலந்து இனிது வாழ்ந்திருக்கிறார்கள் அந்தப் பட்டினத்தில். “வந்தேறிகள்” என்று வசவு பேசப்படவில்லை என்பதும், அதேநேரத்தில் இடம் பெயர்ந்து வந்தவர்கள் உண்டு என்பதும் ஒருங்கே சொல்லப்பட்டுள்ளது.
இதை எடுத்துக்காட்டியுள்ள நூலாசிரியர் பட்டினப் பாலையும், மதுரைக்காஞ்சியும் எப்படி நகர நாகரிகத்தை விவரித்திருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறார். சிந்து வெளியின் மொகஞ்சதோரா- ஹரப்பா நாகரிகம் நகர நாகரி கம் என்பதைச் சுட்டியவர், அங்கிருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள் இங்கு நகர நாகரிகத்திற்கு பங்களித்திருக்க வேண்டும் என்கிறார். அந்த சங்க இலக்கியங்கள் காட்டும் நகர நாகரிகம் கற்பிதம் அல்ல, வரலாறு என்பதை கீழடி அகழாய்வில் வெளிவந்த பாெருட்கள் நிரூபித்துவிட்டன.
அந்த வடமேற்கிலிருந்த இந்த தென்கோடிக்கு சிந்து வெளி மக்கள் வந்த காரணம் என்ன? வெளியிலிருந்து வந்த ஆரியர்களால் இவர்கள் தெற்கு நோக்கி விரட்டப்பட்டிருக்க லாம். புராணங்கள் பலவற்றிலும் அசுரர்களை தேவர்கள் பாதாள லோகத்திற்கு தள்ளியதாக வருகிறது. இது பற்றி எனது “தேவ -அசுர யுத்தம் ஆரிய -திராவிட யுத்தமா?” எனும் நூலில் விவரித்திருக்கிறேன். வடக்கே உள்ளவருக்கு பாதாளம் என்பது தெற்குதான். இப்படியாக அசுரர்கள் எனப்பட்ட திராவிடர்கள் தெற்கே வந்திருக்கலாம். அந்த திராவிடர்களின் பூர்வீகமாக சிந்து வெளி இருந்தது என்பதே ஆர். பாலகிருஷ்ணனின் முடிவு.
தங்களின் பூர்விக பூமியாகிய சிந்துவெளியிலிருந்து விரட்டியடித்த ஆரியர்களை தங்களின் பகைவர்களாகவே பார்த்தார்கள் தெற்கே வந்தவர்கள் என்பதற்கு சங்க இலக்கியத்தை தக்க தரவாகத் தருகிறார் நூலாசிரியர். அங்கே “ஆரியர்” என்று பல இடங்களில் வருவதையும், வரும் இடமெல்லாம் அவரை பகைவராகவே காட்டப் பட்டுள்ளதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். உதாரண மாக “ஆரியர் அலறத் தாக்கி” என்று அகநாறு பாடுகிறது என்கிறார்.
சிந்துவெளி நாகரிகத்தவரே வைகை நதி நாகரி கத்தின் சொந்தக்காரர்கள், அவர்களின் வாரிசுகளே சங்க இலக்கியம் பாடியவர்கள் என்பதற்கு நூலாசிரியர் வைக்கும் சாட்சியம் இடப்பெயர்கள். மனிதர்கள் இடம் பெயரும்போது இடத்தை தூக்கிவர முடியாது; ஆனால் இடப்பெயரை தூக்கி வருவார்கள். தாங்கள் வாழ்ந்த இடத்தை மனிதர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். இதற்கு சமீபத்திய சாட்சியமாக ஐரோப்பாவி லிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர்கள் அங்கே ஊர்களுக்கு ஐரோப்பிய பெயர்களைச் சூட்டியிருப்பதை சுட்டுகிறார் நூலாசிரியர். அமெரிக்காவில் லண்டனும், பாரீசும், பெர்லினும், வியன்னாவும், ஏதென்சும் இருக்கும் அதிசயத்தை காட்டுகிறார்.
நூலின் இயல் 7 மிக முக்கியமானது. அதன் தலைப்பு “திராவிடக் கருது கோளுக்குச் சான்றளிக்கும் சிந்துவெளி இடப்பெயர்கள்”. சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்களாக வெளிப்பட்ட மொகஞ்சதோரா -ஹரப்பா பாகிஸ்தானில் உள்ளது. ஆசிரியர் செய்துள்ள மாபெரும் பணியைப் பாருங்கள்: “இந்தியாவின் முக்கியமான திராவிட மொழிகள் பேசப்படும் நான்கு மாநிலங்களில் உள்ள 1,98,252 இடப் பெயர்கள் அடங்கிய தகவல்தளத்தை உருவாக்கினோம். அதைப் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் பகுதிகளில் உள்ள 2,33,242 இடப்பெயர்களோடு ஒப்பிட்டோம். அதில் 889 பெயர்கள் இரண்டிற்கும் பொதுவாக இருக்கின்றன. இதில் பல முறை இடம்பெறும் பெயர்களை ஒரு பெயராக மட்டும் கணக்கிட்டதில் 889 தனித்துவமான இடப்பெயர்கள் நான்கு தென்னிந்திய மாநிலங்களில் 1543 முறையும், பாகிஸ் தான் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் 2037 முறையும் இடப்பெயர்களாகத் தற்போது பயன்படுத்தப்படுகின்றன”.
பாகிஸ்தானிலும் கொர்கை, பட்டி, சேரி, மானூர், சயத்தாண்பட்டி, ஆமூர் இருக்கின்றன. பாகிஸ்தானிலும் ஏரி, யாரு, கரை, வரை, கல், பாலை, மணை, குரும்பை இருக்கின்றன. ஆப்கானிஸ்தானிலும் தானூர், கொர்கை, ஆசூர், படூர் இருக்கின்றன. ஆப்கானிஸ்தானிலும் மலை, காடு, மணை, யாரு, கல், காணம் இருக்கின்றன. பாகிஸ் தானிலும் ஆப்கானிஸ்தானிலும் கரிகாலன் இருக்கிறான். பாகிஸ்தானில் சிபி, மார்பண், காய்ச்சின, ஆதண், மார்பண் இருக்கிறார்கள். இதனினும் ஆச்சரியம் சங்க இலக்கியத்தின் முர்கன் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானி லும் இருக்கிறார்கள்.
எல்லாம் இடப்பெயர்களாக! இவையெல்லாம் உதாரணத்திற்குச் சொல்கின்றேன். நூலில் காடு, வயல், கடல், பாலை சார்ந்த பல பெயர் களை வரைபடங்கள் வாயிலாகக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். படிக்கவும், பார்க்கவும் பிரமிப்பாக உள்ளது. தென்னிந்தியாவிற்கும் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தானத்திற்கும் பெயர்களில் இவ்வளவு ஒற்றுமையா என்று அசந்து போகிறோம்.
இவ்வளவு பெயர் ஒற்றுமை யதேச்சையானதாக இருக்க முடியுமா? முடியாது என்றே படுகிறது. சிந்துவெளி யில் வாழ்ந்த மக்கள் தென்னகம் வந்தபோது தங்கள் நினைவில் தாங்கள் வாழ்ந்த இடப்பெயர்களையும் சுமந்து வந்து அவற்றை இங்கே சூட்டி நினைவை நிரந்தரமாக்கி யிருக்கிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது.
இதிலிருந்து இன்னொரு முடிவுக்கும் செல்லலாம். அதாவது இடப்பெயர் களில் இருக்கும் ஒற்றுமை மொழியிலும் இருந்திருக்கும் அல்லவா? தென்னகத்தில் பேசப்படும் மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றால், சிந்துவெளியில் அன்று பேசியது மூல திராவிட மொழியாக இருந்திருக்கலாம் அல்லவா? சிந்து வெளியில் கிடைத்த சித்திரக் குறியீடுகள் இன்னும் சரியாக வாசிக்கப்படவில்லை. வாசிக்க முடிந்தால் இதற்கு தீர்வு கிட்டும். அதுவரையில் ஊகத்திற்கு இடம் கொடுக்கலாம்.
இத்துறையின் இரண்டு அறிஞர்களை தனக்கு ஆதரவாக நிறுத்துகிறார் நூலாசிரியர். “சிந்து மக்களின் மொழியாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்புடன் மீதம் இருக்கும் ஒரே ஒரு மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம் மட்டும்தான். ரிக் வேதத்தில் பல திராவிட மொழிச் சொற்கள் கடன்பெறப்பட்டுள்ளன. இதைச் சமஸ்கிருத மற்றும் திராவிட மொழியியல் அறிஞர்கள் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். கி.மு.1500 ஆண்டுவாக்கில் ரிக் வேதம் எழுதப்பட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் திராவிட மொழி களே பேசப்பட்டு வந்தன என்பதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக மேற்சொன்ன வாதங்களின் அடிப்படையில் (ஃபின்லாந்தின்)அஸ்கோ பர்போலா கருதுகிறார்.
பலூசிஸ்தான் பகுதியில் பிராகுயி என்ற திராவிட மொழி இதுவரை தப்பிப்பிழைத்திருப்பதையும் பர்போலா சுட்டிக் காட்டுகிறார்” என்கிறார் நூலாசிரியர்.
அடுத்த சாட்சியாக அவர் நிறுத்துவது நம்மூர்க்காரர். “ஐராவதம் மகாதேவனி்ன் சிந்துவெளி பற்றிய நீண்ட நெடும் ஆய்வு சிந்துவெளி வரிவடிவம் திராவிடமொழியின் ஒரு தொல்வடிவம் என்பதை நிறுவும் விதமாக அமைந்தது. சிந்துவெளிப் பொறிப்புகளில் மற்ற எல்லா விலங்கு களும் பொறிக்கப்பட்டிருக்கும்போது குதிரை பற்றிய தடயம் எதுவுமில்லை. சிந்துவெளிப் பண்பாட்டின் தெற்கு எல்லையாகக் கருதப்படும் தைமா பாத்தில் (மகாராஷ்டிரா) கிடைத்த செம்புச் சிறுதேரில் காணப்படும் சக்கரம் ஆரங் களைக் கொண்டது அல்ல; மாறாக ஆரமற்ற சக்கரம். அத்தேரை இழுத்துச் செல்வது திமில் உள்ள காளைகள். இந்தோ-ஆரியச் சமூகங்களில் குதிரையும், ஆரங்களு டைய சக்கரங்களைக் கொண்ட தேர்களும்தான் முக்கிய அடையாளங்கள். இவை திராவிடக் கருத்தியலுக்கு வலுச் சேர்க்கும் வகையில் மகாதேவனின் ஆய்வுகளில் வெளிப் பட்ட முக்கியச் சான்றுகள்” என்கிறார் நூலாசிரியர்.
இதன் நீட்சியாகத்தான் இந்த இடப்பெயர்கள் சான்றை யும் முன்வைக்கி றார் நூலாசிரியர். “சங்க இலக்கியங்களி லும், பழந்தமிழ் கல்வெட்டுகளிலும் இடம்பெறும் இடப் பெயர்கள், குடிப்பெயர்கள் மற்றும் தனிமனிதர்களின் பெயர்கள் இன்றுவரை சிந்துவெளி நிலப்பகுதியில் இடப் பெயர்களாக எஞ்சியிருப்பதைச் சான்றாதாரங்களோடு விளக்குகிறது. இடப்பெயர்கள் கடந்தகாலத்தின் உறைந்து போன எச்சங்களாக, ஒரு வகையில் சாகாவரம் பெற்ற மொழியியல் தரவுகளாக நிலைபெற்றுத் திகழ்பவை. ஆய்வுலகம் நன்கறிந்த இந்த உண்மையின்பாற்பட்ட இடப்பெயர்ச் சான்றுகளின் மூலமாகச் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளத்துக்கு வலுசேர்க்க முயலு கிறது இந்த நூல்” என்கிறார் ஆசிரியர்.
நூலைப் படித்து முடிக்கும்போது அவரது நோக்கம் நிறைவேறிவிட்டதாக, அந்தக் கணிப்புக்கு வலு சேர்ந்து விட்டதாகப் படுகிறது. அரசு உயர் அதிகாரியாகப் பணி யாற்றிக் கொண்டே இவ்வளவு பெரிய ஆய்வுப் பணியை செய்து முடித்திருப்பது அறிவுலக அதிசயம்தான். ஆர். பாலகிருஷ்ணன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்த அதிமுக்கியமான நூல் மக்கள் பதிப்பாக வர வேண்டும்; இதன் சாரத்தைச் சொல்கிற சிறு நூலாகவும் வர வேண்டும். நம்முடைய இளம் தலைமுறைக்கு நமது கடந்த காலத் தொன்மையை, அதன் தனித் தன்மையைச் சொல்வது இன்று கிளம்பியிருக்கும் சரித்திரப் புரட்டர் களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றும்.